மிகப் பெரிய பீரங்கிகளை ஓட்டுவது, போர்முனையில் காலாட்படையினரை வழிநடத்துவது, குண்டு வீச்சில் ஈடுபடுவது உள்ளிட்ட ராணுவத்தின் அனைத்துப் பிரிவுப் பணிகளுக்கும் பெண்களை அனுமதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த அதிரடி முடிவை வியாழக்கிழமை அறிவித்து, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் கூறியதாவது:
நாட்டின் மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்களின் அறிவுக்கும், திறனுக்கும் அங்கீகாரம் கொடுக்காமல் மழுங்கடிப்பது அமெரிக்காவின் நலன்களுக்கு உகந்ததல்ல.
எனவே, ராணுவத்தின் ஒரு சில பிரிவுகளில் பணியாற்ற பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடிவு செய்துள்ளோம்.
இதன்மூலம், இதுவரை இல்லாத வகையில் தகுதியுடைய பெண்களால் ராணுவத்தின் எந்தப் பணியையும் ஆற்ற முடியும்.
அவர்கள் பீரங்கிகளை ஓட்டிச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
போர்முனையில் காலாட்படையினரை வழிநடத்திச் செல்லவும், கடற்படை வீரர்களாக களமிறங்கிச் சண்டையிடவும் அனுமதிக்கப்படுவர்.
அவர்களால் இனி கடற்படையின் சிறப்பு அதிரடிப் படையிலும் இணைந்து சேவையாற்ற முடியும்.
எதிரிகளின் பிரதேசங்களில் பாராசூட் மூலம் குதித்துப் போரிடும் காலாட்படையிலும் சேர முடியும்.
அந்த வகையில், அரசின் இந்த முடிவால் இதுவரை ஆண்கள் மட்டுமே செய்து வந்த ராணுவ சேவைகளை பெண்களும் செய்ய வழி ஏற்பட்டுள்ளது.
இது அமெரிக்க ராணுவத்தை மேலும் திறன் கொண்டதாக்கும் என்றார் கார்ட்டர்.
ராணுவத்தின் இந்த முடிவு, அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்பம் என்று அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்தார்.
No comments:
Post a Comment